தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தின் பின் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் 2019 ஆம் ஆண்டுக்குரிய தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்பட உள்ளது. 2019 தேர்தல் டாப்பில் பெயர் உள்ளவர்கள் இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை உள்ளவர்கள் அதேபோல் தேர்தலில் வாக்களிப்பதற்கு சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை சமர்ப்பித்து தனது வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளமாக அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தினால் மதகுருமாருக்கு என வழங்கப்பட்ட அடையாள அட்டை சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற முதியோர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளட்படும்.
இத்தகைய எந்த ஒரு ஆவணமுமில்லாத ஒருவர் தற்காலிகமாக தேர்தல் திணைக்களத்தினால் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
ஜூலை மாதம் 17ம் தேதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய தரவுத்தளத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக உட்சேர்க்கப்பட்ட சகல தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரர்களுக்கும் அடையாள அட்டையினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கு ரிய விசேட நடவடிக்கையினை ஆள்பதிவு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அதேபோல 2020 ஜூலை மாதம் 29ஆம் தேதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்கள தரவுத்தளத்தில் உட் சேர்க்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்திய கடிதத்தினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கும் ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே தேசிய அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் ஜூன் 29-ஆம் தேதிக்கு முன்னர் தங்களுக்குரிய அடையாள அட்டைக்குரிய விண்ணப்பத்தினை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து தங்களுக்குரிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளமுடியும். இது தொடர்பில் சகல கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் இலகுவாக வாக்காளர்கள் வாக்களிப்பினை மேற்கொள்ள நாம் முயற்சிக்கின்றோம் எனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலர்கள் மற்றும் கிராமசேவையாளர்களுக்கு தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சண்டிலிப்பாய், சங்கானை, தெல்லிப்பளை, உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமசேவையாளர் களுக்கு தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.
தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவில் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டு கிராமசேவையாளர்களுக்கு தேர்தல் விதிமுறை தொடர்பில் விளக்கமளித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்